சனி, 13 மே, 2023

கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை)






"அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான்.



" அது அதன் இயல்பில் இருக்கிறது" கரடி சொன்னது.



" இல்லை , அது நேராக வளர்ந்திருக்க வேண்டும். அதுதான் அதன் இயல்பு " என்றான் மாடு மேய்க்கும் பையன்



" உன் புத்தன் தூங்குகிறான். நீ வலையில் சிக்கிக் கொண்டாய். ஆனாலும் நீ உன் இயல்பில் இருக்கிறாய். புத்தன் விழித்ததும் அவனைக் கொன்று விட்டு, மீண்டும் இந்த மரத்தைப் பார்" என்றது கரடி.



" ஓ அப்படியா, நான் இயல்பில் இருக்கிறேன் தானே?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான் 



"ஆம்" என்று கரடி சொன்னது.



வாளை எடுத்து கரடியைக் கொன்றான். கரடியின் எலும்பில் புத்தன் சிலை செய்து மடம் ஒன்றை உருவாக்கிக் கட்டினான். தன் சீடர்கள் கொண்டு கோணல் மரத்தை வெட்டினான்.



கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நேரான மரங்களை நட்டான். தினமும் அமைதியாக அந்த மரங்கள் இடையே நடப்பான். அறுபது வருடங்கள் கழித்தும் பிறகு ஒருநாள் மரங்கள் இடையே இவன் நடக்க மரங்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு கோணல் மரம் வளர்ந்திருந்தது. அவனுக்கு ஆச்சரியம். இது எப்படி சாத்தியம் " நான் அனைத்து மரங்களையும் கவனித்து வந்தேனே"என்று கத்தினான். இவனின் சத்தம் கேட்டு சீடன் ஒருவன் அங்கே வந்தான். அவன், இவனைப் பார்த்து " குருவே! அந்த மரத்தை ஒரு சிறுவிதான் நட்டாள்.




"யார் அவள் இங்கே கூட்டிவா" என்றான் இவன். 




அந்த சிறுவி கூட்டி வரப்பட்டாள். அவள் மெல்லத் தள்ளாடி நடந்து வந்தாள். அவள் விகாரமான உடல் அமைப்பைக் கொண்டிருந்தாள்.




"எதற்காக இந்த மரத்தை இங்கே நட்டு வளர்த்தாய்?" அவன் கேட்டான்




"அது தன் இயல்பில் இருப்பதால் வளர்த்தேன்" என்றால் சிறுவி.




"ஒரு சமுதாயத்தில் அறம் உடையோருக்கு மட்டுமே இடம். அறம் மீறியவர்களுக்கு இடம் கிடைத்தது. அதுபோல்தான் நேரான மரங்களிடையே கோணல் மரத்திற்கு இடமில்லை " என்றான் அவன்.




" கோணல் என்பது குற்றவாளிகளை மட்டும் குறிக்காது. பொது சமுகத்தில் இயல்பாக இருக்க முடியாத யாரையும் குறிக்கும்.அதாவது என்னைப் போல், எங்களைத் தவிர்க்க முயலாதீர்கள் அவ்வளவுதான் "




" ஹாஹா " அவன் சிரித்தான்.




"இந்த மரத்தைக் காலையில் வெட்டி விடுங்கள் "என்று உத்தரவிட்டான் அவன்.




சிறுவி வெறித்துப் பார்த்தாள். 





அதிகாலை மரத்தை வெட்ட வந்தவர்கள் வியந்து நின்றனர் ‌. கோணல் மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாள்  சிறுவி.




அங்கே வந்த அவன் " கோணல்கள் இல்லாதவரை நமக்கு நல்லதுதான். மரத்தை வெட்டுங்கள். அந்த விகாரி பெண்ணை புதைத்து விடுங்கள்"


அவனுக்குள் புத்தர் நீண்ட தூக்கத்திலிருந்தார். ஆனால் உலகின் சிறந்த புத்த துறவியாக அவன் இருந்தான்.


முற்றும் ‌


வெள்ளி, 12 மே, 2023

புத்தன் விழித்துக் கொண்டான்

 மொக்கை கவிதைகள்.


பஞ்சில் நெருப்பும், நீரில் சுழலும், வாழ்கையில் துன்பமும்.... வந்துவிட்டது இதோ புத்தன் சாகிறான்? இல்லை, புத்தன் விழித்துக் கொள்கிறான்.


         மாதங்கி மைந்தன்


ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஒரு சாமியின் கதை(சிறுகதை)


 மை இருட்டாக இருந்தது. செல்வி தன் ஏழு மாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு எந்த நேரத்திலும் அப்பன் வீட்டுக்குக் கிளம்பிவிடும் வழக்கம் கொண்டவள் செல்வி. இதுதான் முதல் முறை இருட்டு நேரத்தில் புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு அப்பன் வீட்டுக்கு இவள் போவது. 


தன் மாமியார் சுருக்கு என்று ஒரு சொல், சொல்லி விட்டாள் என்று தன் புருஷனிடம் செல்வி சொன்னபோது "என் அம்மாதானே சொன்னாள். கொஞ்சம் பொறுத்துத்தான் போவேன்" என்று புருஷன் சொன்னதும், இவளுக்கு மூக்கு சிவக்கக் கோபம் தலைக்கேறியது.


" உன் அம்மாவிடம் நொட்டை பேச்சு கேட்டுக்கிட்டு வாழ்வதற்கு வேறு பெண் பார். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன்" என்று கிளம்பி விட்டாள்.


எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப்பேற்றுக்கு அப்பன் வீட்டுக்குப் போகிறவள்தான். ஆனால் செல்விக்குக் கொஞ்சம் முன் கோபம் அதிகம்தான். அப்பன் வீட்டில் ஒரே பெண் என்பதால் சுடு சொல் கேட்காமல் வளர்ந்தாள். புருஷன் வீட்டில் சுடு சொல் கேட்காமல் இருக்க முடியாதுதானே.


" இருட்டு நேரத்தில் போகாதேடி. இந்த முறை எல்லாம் உன் பின்னால் வருவேன் என்று நினைக்காதே. உனக்கு இதே வழக்கமாக போச்சு" என்று புருஷன் சொற்கள் இவளுக்கு இன்னும் வீம்பைக் கொடுத்தது. வெறும் கையை வீசிக் கொண்டு கிளம்பி விட்டாள். அப்பன் வீட்டுக்கு ஐந்து மைல் நடந்து போக வேண்டும். கொஞ்சம் தூரத்திற்குத் தான் மாட்டு வண்டி பாதை உண்டு, அதன் பிறகு ஒற்றையடிப் பாதை தான்.


இரண்டு மைல் நடித்திருப்பாள் கால் கடுக்க தொடங்கியது. நேரம் கழிந்தும் உதிக்கும் நிலா மெல்லக் கிழக்கே இருந்து மேலே ஏற தொடங்கியது. தூரத்தில் இருக்கும் கருப்பு சாமி பதி நிலா வெளிச்சம் தெரியத் தொடங்கியது. கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் உட்கார ஏதுவான பலகை கற்கள் உண்டு. வேகமாக நடந்தாள் செல்வி. கருப்பு சாமி பதி அருகிலிருந்த ஒரு கல்லில் அமர்ந்தாள். நிலா வெளிச்சத்தில் மீன் அரித்து வானம் ரம்மியமாகக் காட்சி தந்தது.


" கருப்பு சாமி ஐயனே என் அப்பன் வீட்டுக்குப் போகிற வரை எனக்குக் கால் வலிக்கக் கூடாது" வாய் வீட்டு சொல்லி கை எடுத்துக் கும்பிட்டாள் செல்வி. லேசான காற்று வீசத் தொடங்கியது. செல்வி ஒருவகையான இதத்தை உணர்ந்தாள். மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள் செல்வி.


" தாயி, யாரும்மா? இந்த நேரத்தில்?" என்ற ஆணின் குரல் செல்வியைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.


"யார்?" நிலா ஒளியியல் வேட்டியுடன் நின்ற ஆண் மகனைப் பார்த்துக் கேட்டாள் செல்வி.


" என் பேரு கந்தன் தாயி. நீ எங்கே போற தாயி?" என்று அவளை நெருங்கி வந்து கேட்டான் கந்தன்.


" நான் என் அப்பன் வீட்டுக்குப் போகிறேன். கரட்டுப்பட்டிக்கு போகனும். நீ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டாள் செல்வி.


"தாயி நான் ஒரு நாடோடி. கிடைத்த வேலையைச் செய்வேன். கிடைத்த இடத்தில் தூங்குவேன். கருப்பு சாமி பதியில் அந்த பாறையில் படுத்திருந்தேன். நீங்கள் சாமி கும்பிட்டதைக் கேட்டு உங்களைக் கவனித்தேன். தனியாகப் போகிறீர்களே கூட யாரும் வரவில்லையா?" என்று கேட்டான் கந்தன்.


" இல்லை" ஒற்றை சொல் பதில் கொடுத்தாள் செல்வி.


"அப்படியானால் நான் உங்கள் ஊர் வரை துணைக்கு வருகிறேன்" என்றான் கந்தன்.


" உனக்கு எதற்குச் சிரமம். நானே போய்விடுவேன்" என்றாள் செல்வி.


" கிட்டத்தட்ட மூன்று மைல் இருக்கும் உங்கள் ஊருக்கு, நானும் துணைக்கு வருகிறேன். வாங்கப் போகலாம் " என்று அவன் முன்னே நடக்க , செல்வி வேறு வழியின்றி அவன் பின்னால் நடந்தாள்.


" ஏன் தாயி இந்நேரத்தில் அப்பன் வீட்டுக்கு போறீங்க?" என்று பேச்சுக் கொடுத்தான் கந்தன்.


" அது... புருஷன் கூட கொஞ்சம் பிணக்கு" என்று சொன்னால் செல்வி.


" குடும்பம் என்றால் சின்ன சின்ன சச்சரவு இருக்கத்தான் செய்யும். அதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் இப்படி பிணக்கு கொண்டு கிளம்பிவிடுவது சரி? என்று கேட்டான் கந்தன்.


செல்விக்கு என் பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் அமைதியாக நடந்தாள்.


" நான் என்ன சொல்றேனு உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அனுசரிப்பு செய்து வாழ்வதுதான் வாழ்க்கை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றெல்லாம் வாழ முடியாது தாயி. மனிதர்களை வெறும் பார்வையால் எடை போடும் உலகமாகிவிட்டது" என்று ஒரு விதமாகப் பேசினான் கந்தன்.


இப்போதும் செல்வி அமைதியாகவே நடந்தாள்.


" உங்களுக்கு நான் சொல்வது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றான் கந்தன்.


" அப்படியில்லை. நீங்கள் சொல்வது புரிகிறது " என்று அமைதியைக் கலைத்தாள் செல்வி.


" நாம் வேறு ஏதாவது பேசுவோம்" என்ற கந்தன். " வெகு நாளுக்கு முன்பு நான் ஒரு பண்ணையாரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த பண்ணையார் நல்ல மனிதர். சொன்ன சம்பளத்தில் குறைக்காமல் கொடுத்து விடுவார். ஒருநாள் அவர் போட்டிருந்த மோதிரம் ஒன்று காணாமல் போய்விட்டது. வேலையாட்கள் யாரேனும் திருடியிருக்க வாய்ப்புள்ளது என்று நான் உட்பட வேலை பார்த்த பதிமூன்று பேரையும் தரவாகச் சோதனை செய்தார்கள். ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. ஊரார் எங்களை அடித்து விசாரிக்கச் சொன்னார்கள். ஆனால் எங்கள் பண்ணையார் அப்படிச் செய்யவில்லை. எங்களை அவர் நம்பினார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் வேலை செய்தோம். ஒரு மாதம் கிழிந்திருக்கும். ஒரு நாள் பண்ணையார் மகன் பனைமரத்தில் நூங்கு வெட்ட ஏறினான். ஏறியவன் " அப்பா, உங்கள் மோதிரம் இங்கே காக்கை கூட்டில் இருக்கிறது" என்று கீழே நின்ற பண்ணையாரைப் பார்த்துக் கத்தினான். காக்கை ஏதோ உணவு என்று பண்ணையார் மோதிரத்தைக் கழற்றி வைத்த நேரத்தில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்தோம். எங்கள் பண்ணையார் எங்கள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை." என்ற கந்தன் கொஞ்சம் கதையை நிறுத்தினான். 


" அந்த பண்ணையார் இறந்தபிறகு எங்களுக்கு வேலை இல்லாமல் போனது. ஒவ்வொருத்தரும் அவர் அவர் வழியில் போனோம். சில நாட்கள் உணவு இல்லாமல் எல்லாம் இருந்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை கிடைக்கும். எதுவும் நிரந்தர வேலையாக அமையவில்லை. என் போதாத காலம் நான் அந்த கழுத்தணியை பறித்திருக்கக் கூடாது. ஆனால் ஒன்றைச் சொல்கிறேன் தாயி . நான் கெட்டவன் கிடையாது" கந்தன் பேசுவது செல்விக்கு விளங்கவில்லை.


"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை" என்றாள் செல்வி.


அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். " நான் ஒன்றும் கேட்டால் செய்வீர்களா தாயி?" என்றான் கந்தன்.


"என்ன?" என்றாள் செல்வி.


"கருப்பு சாமி பதியில் ஓரமாக ஒரு இடம் பார்த்து புது சாமி ஒன்றை நீங்கள் வைக்க வேண்டும். செய்வீர்களா" என்று கேட்டான் கந்தன்.


" எந்த சாமிக்கு?" என்று கேட்டாள் செல்வி.


" ஊர் வந்துவிட்டது தாயி. இனிமே நீங்கப் போய்விடுங்கள் " என்று பேச்சை மாற்றி நின்றான் கந்தன்.


" எந்த சாமிக்கு என்று கேட்டேனே?" என்றாள் செல்வி.


" கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் என்ன நடந்தது என்று உன் அம்மாவிடம் கேளுங்கள் அப்போது புரியும் " என்று சொன்னவன் திரும்பி நடந்தான். நிலாவின் ஒளியில் தேவன் போல அவன் நடந்தான்.


செல்வி தன் அப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். இரண்டு நாள் கழிந்தது. செல்வியின் அம்மா ,செல்விக்குத் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


" அம்மா , உன்னிடம் ஒன்று கேட்கவா?" என்றாள் செல்வி.


" என்னடி? " என்றாள் அம்மா.


" கருப்பு சாமி பதி அருகில் ஏதாவது நடந்ததா?" என்று கேட்டாள் செல்வி.


" பொதுவாகக் கேட்டால் என்னடி செல்ல?" என்றாள் அம்மா.


" இல்லமா , நான் வந்த இரவு கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் ஒரு ஆளைப் பார்த்தேன். அவர் எனக்குத் துணையாக ஊர் வரை வந்தார். கருப்பு சாமி பதியில் ஓரத்தில் ஒரு சாமியை வைக்கச் சொன்னார். அதனால்தான் கேட்டேன்" என்றாள் செல்வி.


" யாருடி துணைக்கு வந்தது?" என்று கேட்டாள் அம்மா.


" கந்தன் என்று சொன்னார்" என்றாள் செல்வி.


" கந்தனா? அம்மா வியந்து கேட்டாள்.


" கந்தனை உனக்குத் தெரியுமா?" என்றாள் செல்வி.


"அடியே மகளே. என் கழுத்திலிருந்து நகையைப்‌ பறித்துக் கொண்டு போன நாடோடி பயல் தான் கந்தன். அவனைக் கருப்பு சாமி பதி அருகில்தான் ஊரார் பிடித்துக் கட்டி வைத்து அடித்தே கொன்றார்கள். அவன் எப்படி உனக்குத் துணையாக வர முடியும். இந்த நிகழ்வு எல்லாம் நீ பிறப்பதற்கு முன்பே நடந்தது" என்று வியந்து கேட்டாள் அம்மா.


செல்விக்கு என் சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கு எல்லாம் புரிந்தது. அடுத்த ஆறு மாதம் கழித்து ஆற்றில் கல் எடுத்து கந்தசாமி என்ற புது சாமியை , கருப்பு சாமி பதியில் வைத்தாள் செல்வி. ஊரார் இப்போது கருப்பு சாமியுடன் ,கந்தசாமியையும் கும்பிடுகிறார்கள்.







புதன், 21 டிசம்பர், 2022

மெய்யைத் தொலைத்து

 



" நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?" இது அந்த பெண்ணின் கேள்வி.


"தெரியவில்லை" இது அந்த பொடியனின் பதில்.


அந்த பொடியன் கையில் ஒரு தொங்கும் விளக்கைப் பிடித்திருந்தான்.


" உனக்கும் நாம் எங்கே போகிறோம் என்று தெரியாதா?" மீண்டும் கேட்டாள் பெண்.


" அவர் சொன்னபடி இங்கே நிற்கிறேன். ஒரு பெண் வருவாள் என்று சொல்லி விட்டு, நீங்கள் வந்ததும் வடக்கு பக்கமாக மோகினி சிலை இருக்கிற இடத்தில் வந்து நம்மை நிற்கச் சொன்னார்" என்றான் பொடியன்.


அப்படியா,சரி வா போகலாம்" அடர்ந்த காட்டில் அந்த பெண்ணும் , அந்த பொடியனும் வடக்குப் பக்கமாக நடந்தனர். மரங்கள் அடர்ந்து கடுமையான பாதையாக அது இருந்தது.


பிரமாண்டமான மோகினி சிலை அது. மோகினி வடிவத்தில் ஈர்க்கும் நளினமாக நின்றாள். இருவரும் அந்த சிலை நெருங்கினார்கள். சிலை சட்டென்று உயிர் பெற்றது.


" யார் பலி?" என்று உரக்கக் கேட்டது மோகினி. இந்த விளையாட்டு இந்த இடத்தில் இப்படி அமைக்கப்படவில்லையே! என்று மெய் நிகர் (VR - Virtual Reality Game) விளையாட்டைத் தன்னை கொண்டு சோதித்துக் கொண்டிருந்த நித்யா குழம்பி, மெய் நிகர் விளையாட்டு கருவியை தன் தலையிலிருந்து எடுக்க முயன்றாள். ஆனால் எல்லாம் கை மிஞ்சிவிட்டது. அந்த விளையாட்டில் இவளுடைய பாத்திரமான அந்த பெண்ணின் தலையைத் துண்டானது. நித்யா வித்தியாசமாக உணர்ந்தாள். அவள் கதாபாத்திரத்தைக் கொன்றது அந்த விளையாட்டில் தானியங்கி கதாபாத்திரமான அந்த பொடியனின் கதாபாத்திரம்.


"என்ன இது?" நித்யா வாய்விட்டுச் சொல்லும் நேரம் , அவளுக்குள் யாரோ நுழைந்து.... பிழை (Error) ..பிழை ... கணினி எச்சரிக்கை செய்தது.


நித்யா மெய் நிகர் கருவி தலையிலிருந்து எடுத்தாள். ஆனால் அவள் குணத்தால் நித்யா இல்லை.


" இது தான் நீங்கள் வாழும் உலகமா? ஹா,ஹா உங்கள் உலகத்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இந்த பொடியன் அறியப் போகிறான்" என்றாள் நித்யா. அது நித்யா அல்ல; அது பொடியன்.


அந்த அறையில் முழுவதையும் புரட்டிப் போட்டாள் நித்யா. ஒரு இரும்பு தடியைக் கண்டு எடுத்தாள். அவள் இருந்தது அந்த விளையாட்டு நிறுவன கட்டிலில் எட்டாவது தளம். அந்த இரும்பு தடியைக் கொண்டு நித்யா கொன்ற நபர்களின் எண்ணிக்கை பதிமூன்று பேர். நித்யா செய்யவிருந்த பதினான்காம் கொலை ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கி துண்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.


அடுத்த நாள் முக்கிய செய்தி இந்த நிகழ்வுதான். ஆனால் சிக்கல் இத்தோடு முடியவில்லை. அடுத்த வாரம் இந்த மெய் நிகர் விளையாட்டு சந்தைக்கு வரவிருக்கிறது.... மீண்டும் பொடியன் வருவான்.


(ஹாஹாஹா முற்றும்?)




திங்கள், 19 டிசம்பர், 2022

ஓங்கில் உலகம் (சிறுகதை)


 

முருகன் புதிய கோளத்தைத் தேடி தன் விண் ஓடத்தை வெளி-காலத்திற்கு மத்தியில் செலுத்திக் கொண்டிருந்தான். முருகன் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கப் போகிறான். அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அரிதானது. உடு திரள் மத்தியில் பயணிக்கும் அளவுக்கு மனிதர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்டாலும் , சில நோய்களுக்கு மனிதர்களால் தீர்வு காணமுடிவில்லை என்பது மெய்.


உடு திரளின் வெளிப்புறத்தில் ஒரு சிறு கோளம் மனிதனின் முதன்மை தேவையான தண்ணீரைக் கொண்டிருந்தது. அதில் தரையிறங்கினான் முருகன். அந்த கோளத்தில் தண்ணீர் இருந்தாலும் , முறையான பாதுகாப்பு மூச்சு கருவி இல்லாமல் மூச்சு விட முடியாது. முருகன் தற்காப்புடன் அந்த கோளத்தில் தன் வாழா தேவையான செயற்கையான பகுதியை உருவாக்கிக் கொண்டான். இந்த கோளத்தில் ஆறு மணி நேரம் பகல், ஆறு மணிநேரம் இரவுப் பொழுதாகவும் இருந்தது. பன்னிரண்டு மணி நேரம் ஒரு நாள் என்ற கணக்கில் ஒரு மாதம் கழிந்தது.


முருகன் பாதுகாப்பு மூச்சு கருவியை அணிந்து கொண்டு அந்த கோளத்தின் கடல் கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தான். கடல் அடர் கறுநீலத்தில் சிறு சிறு அலைகளுடன் ஆர்ப்பாட்டமே இல்லாமல் பெரிய மிருகம் ஒன்று அமைதியாக மூச்சு விடுவது போலக் காட்சி தந்தது. தூரத்தில் ஒரு சிறு குன்று தென்பட்டது. அந்த குன்றை இங்கே வந்ததிலிருந்தே முருகன் கவனித்திருக்கிறான், ஆனால் அதன் அருகில் போனதில்லை. இன்று அதை நெருங்கிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் நடந்தான்.


அந்த குன்றை நெருங்கி அதை கவனித்தான். அந்த குன்று கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் மீது படிந்திருந்த மண்ணை கையால் தேய்த்துப் பார்த்தான். அந்த குன்று வெண் பளிங்கு தன்மையைக் கொண்டிருந்தது. உதிரியான பளிங்குக் கற்களைத் தனியாகப் பெயர்த்து எடுக்க முடிந்தது. அதில் ஒரு பளிங்குக் கல்லைக் கையில் எடுத்தான். அவன் கையுறைகள் அணிந்திருந்தான். ஒரு கையிலிருந்து கையுறையைக் கழற்றிவிட்டு அந்த பளிங்குக் கல்லைத் தொட்டுப் பார்த்தான். அப்போது மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தான். அவன் நினைவுகள் எல்லாம் உறிஞ்சப்படுவது போல உணர்ந்த முருகன், சட்டென்று அந்த கல்லைக் கடலில் தூக்கி எறிந்து விட்டான்.


முருகனுக்குக் கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருந்ததால் அவன் உடனே தன் பாதுகாப்பு அமைப்புக்குத் திரும்பினான். படுகையில் படுத்தவன் உறங்கிப்போனான். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கண்விழித்தான். எழுந்தவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு அசைபோட்டவன். மீண்டும் மூச்சு கருவியை எடுத்து அணிந்து கொண்டு தன் பாதுகாப்பு அமைப்பை விட்டு வெளியேறி வந்த முருகன் கடலை நோக்கி நடந்தான். கடலை கவனித்தான். அவனுக்கு அமைதியான மிருகமாகவே கடல் தெரிந்தது. கடல் தண்ணீரில் நேரடியாக அவன் காலை வைத்தது கிடையாது. பாதுகாப்பு உடையுடன் தான் கடலில் தண்ணீர் எடுப்பான். இப்போது கடல் அவனை அழைப்பது போல அவனுக்குப் பட்டது. அவன் கடலை நெருங்கி தண்ணீரில் கால் வைத்தான். பாதுகாப்பு உடையில்தான் இருந்தான்.


" கடலுக்குள் வா" என்ற மர்ம குரல் அவன் காதுகளை எட்டியது. முருகன் வியந்து போனான். அந்த குரல் தமிழிலிருந்ததுதான் அவனுக்கு வியப்பு. மனிதர்கள் மத்தியில் ஆங்கிலமே முதன்மை மொழியாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்க தன் தாய் தனக்குச் சொல்லிக் கொடுத்த பழம்பெரும் மொழியில் அந்த குரல் இருக்க முருகன் பெரும் வியப்புக்கு உள்ளானான்.


" தயங்க வேண்டாம். உனக்கு எந்த தீங்கும் நேராது. கடலுக்குள் இறங்கி வா. அஞ்சாதே " என்று மூன்று அந்த குரல் மர்மமாக ஒலித்தது. இன்னும் சில வருடங்களில் இறக்கப் போகும் தான். வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கிறேன். ஆனது ஆகட்டும் என்று கடலில் இறங்கினான் முருகன். அவன் கடலில் இறங்க, இறங்கத் தண்ணீர் அவனை விழுங்கியது. சட்டென்று அவன் முழுவதும் மூழ்கியது அவனைச் சுற்றி ஒரு காற்று குமிழி அவனை உள் வாங்கிக் கொண்டு அவனைக் கடலின் ஆழத்திற்கு எடுத்துச் சென்றது.


அந்த ஆழத்தில் மிக நுட்பமான, ஒளிரும் பாசிகள் மூலம் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் பிரமாண்டமாக அவனுக்குக் கட்சி அளித்தன. அவன் அந்த கட்டமைப்பின் மத்திய பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்த கட்டமைப்புகளிலிருந்து ஓங்கில் மீன் அமைப்பு கொண்ட உயிரினங்கள் வெளிப்பட்டன. அவன் முன் ஓர் ஓங்கில் மீன் மிதந்து வந்தது. அங்கிருந்த அனைத்து ஓங்கில்களுக்கும் மூன்று விரல்கள் கொண்ட இரண்டு சிறு கைகள் இருந்தன.


அவன் முன் வந்த ஓங்கில் மீன் தன் கையில் ஒரு பளிங்குக் கல்லை வைத்திருந்து.


" இந்த கல் மூலம் உன் இருப்பை நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்த கல்லில் உன் நினைவுகள் பதிவாகியுள்ளது. உன் தாய் மொழியையும் இதைக் கெண்டே நான் அறிந்தேன்‌. வேறு கோளத்திலிருந்து எங்கள் கோளத்தில் குடியேறியிருக்கிறாய்" என்ற குரல் மட்டும் கேட்டது.


"ஆம் " என்றான் முருகன்.


" நீ இங்கே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. உன்னைத் தொடர்ந்து உன் இனத்தவர் இங்கே வர வாய்ப்புள்ளது. உன் இனத்தவர் "மனிதர்கள் " என்று அறியப்படுகிறீர்கள். உள்ளத்தில் ஒன்று வைத்து , புறத்தில் ஒன்று பேசும் ஆபத்தான இனம் உன் இனம். உங்கள் இனத்தால் எங்கள் உலகிற்கு ஆபத்து வருவது நாங்கள் விரும்பவில்லை" குரல் மட்டும் கேட்டது. அந்த ஓங்கில் மீன் வாய் அசையவில்லை.


" நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் சில வருடங்களில் இறந்து விடுவேன்" என்றான் முருகன்.


" அது எங்களுக்குத் தெரியும். உன் நினைவில் அதைப் பார்த்தோம். உன் இனத்தவர்களை நினைத்தே நாங்கள் அஞ்சுகிறோம். நாங்கள் ஓர் உதவியை உனக்குச் செய்கிறோம். அதற்குப் பதிலாக எங்களுக்கு ஓர் உதவியை நீ செய்ய வேண்டும் " என்று குரல் கேட்டது.


" என்ன உதவி?" என்றான் முருகன்.


" உன் நோய்க்கு நாங்கள் தீர்வு தருகிறோம். அதே நேரத்தில் நீ இந்த கோளம் முழுவதும் மனித தொழில்நுட்ப பார்வையிலிருந்து மறக்கக் கூடிய கருவியை உருவாக்கித் தரவேண்டும். என் சொல்கிறாய்" என்றது குரல்.


" உங்களால் என் நோயைச் சரி செய்துவிட முடியுமா?" என்றான் முருகன்.


"இந்த கடலில் கிடைக்கும் சில கனிமங்கள் உன் உடலில் செயல்படத் தகுதியானவை. அவை கொண்டு ஒரு மருந்தை எங்களால் உருவாக்க முடியும். அது உனக்கு நீண்ட ஆயுளை அளிக்கும். உன்னால் எங்களுக்குத் தேவையான கருவியை உருவாக்க முடியுமா?" என்றது குரல்.


"முடியும் " என்றான் முருகன். முருகன் மிகச்சிறந்த பொறியாளன்.


அடுத்த ஒரு மாதத்தில் முருகன் அந்த கருவியை உருவாக்கி விட்டான். ஒன்று மேற்பட்ட கருவிகளை உருவாக்கி அந்த கோளம் முழுவதும் பதித்தான் முருகன். எந்த மனித தொழில்நுட்பமும் இந்த கோளத்தை அடையாளம் காணமுடியாது.


முருகனுக்கு நோய்க்கு மருந்து கிடைத்தது. மருந்துடன் இந்த கோளத்தை விட்டு வெளியேறினான் முருகன்.


மனித கணக்குப்படி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முருகன் வாழ்ந்தான் என்று சொல்லப்படுகிறது.



முற்றும்.



சனி, 3 டிசம்பர், 2022

துணை (சிறுகதை)

 



அவன் வருகையைக் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. தன்னால் சொந்தக் காலில் நின்றுவிட முடியும் என்று நம்பி , குடும்பத்தை விட்டுப் போனவன். அவன் தொட்ட எதுவும் துளிர்க்க வில்லை. தான் வாழ்க்கையில் அடைய நினைத்த அனைத்தையும் பிறர் அடைவதைக் கண்டு ஏங்கியிருக்கிறான். தானும் ஒரு நாள் நினைத்ததை அடைந்தே தீருவோன் என்று நம்பினான். இப்போது அவனுக்கு அந்த நம்பிக்கை கொடுத்த அயர்ச்சி மட்டுமே மிச்சம்.


வீட்டுக்கு வந்தவனை யாரும் பெரிதாக அக்கறை கொண்டு வரவேற்கவில்லை. தம்பியின் வீட்டில் ஒரு சிறு அறையில் தங்கிக் கொண்டான். இவன் தம்பி நல்ல சம்பாத்தியத்தில் இருப்பவன். இவனுக்குச் சாப்பாடு போடுவதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை. இவன் தம்பிக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் , ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். பெண் குழந்தை நான்காம் வகுப்பு படிக்கிறாள். 


முதல் வாரம் வயலில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து நேரத்தை ஓட்டினான். இரவு வந்ததும் தன் அறையில் வந்து அடைந்து கொள்வான். ஏதாவது புத்தகம் ஒன்றில் மூழ்கிவிடுவான். காலை , மதியம் மற்றும் மாலை மூன்று நேரமும் சாப்பாட்டை ஒரு தட்டில் போடப்பட்டு மூடி வைத்து விடுவாள் தம்பி மனைவி. சாப்பாட்டில் இவனுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் தனிமை இவன் மனதில் இறுக்கத்தை வளர்த்துக் கொண்டு வந்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலிருந்த ஓடையில் தூண்டில் ஒன்றைப் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் இவன். கொலுசு அணிந்த யாரோ தயங்கித் தயங்கி நடந்து வரும் ஓசையை இவன் கேட்டான். இவன் மெல்ல ஓரக் கண்ணால் பார்த்தான். குட்டப் பாவாடையும், சட்டையும் அணிந்து கொண்டு , இரட்டை ஜடையுடன் , கையில் ஒரு பழைய தூண்டிலைப் பிடித்தபடி இவன் பின்னால் வந்து நின்றாள் தம்பி மகள் வள்ளி.


இவன் வீடு திரும்பியதிலிருந்து இதுவரை இவனிடம் ஒரு வார்த்தையும் பேசியதில்லை வள்ளியும் ,இவள் தம்பியும். இவன் வள்ளி பிறக்கும் முன்னே ஊரைவிட்டுப் போனவன்.


இவன் வள்ளியிடம் எதுவும் பேசாமல் தூண்டிலை கவனித்தபடியே கல்லில் அமர்ந்திருந்தான். வள்ளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல இவன் நெருங்கி நின்று " இதுல எப்படி மீன் பிடிக்கிறது. எனக்குச் சொல்லி தருவியா பெரியப்பா?" என்று தயங்கிக் கேட்டாள்.


" உன் பேரு என்னனு சொன்னியான உனக்குத் தூண்டில் போட கற்று தாரேன்" என்று வள்ளியிடம் வேடிக்கையாகச் சொன்னான்.


" என் பேரு வள்ளி. பெரியப்பா" அப்பாவியாகச் சொன்னாள் வள்ளி.


வள்ளியின் முகத்தில் சிறு கசடும் இல்லை. குழந்தைகள் தெய்வம் என்பதில் சிறு பிழையும் இல்லை. வள்ளிக்குத் தூண்டிலைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தான் இவன். தூண்டில் போட கற்றுக் கொண்ட வள்ளிக்குக் கடவுளையே கண்டுவிட்ட மகிழ்ச்சி. குழந்தைகளின் மகிழ்ச்சி மட்டுமே முழுமையானது.


வள்ளியும் , இவனும் ஒரு பாத்திரம் நிறைய ஓடை மீன்களைப் பிடித்திருந்தார்கள். இவனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு மனம் லேசானது. வள்ளி இவனுடன் நன்றாக நட்பாகிப் போனாள். இரவு உணவின் போது ,தன் உணவு தட்டை எடுத்துக் கொண்டு வந்து இவனுடன்  அமர்ந்து சாப்பிட்டாள் வள்ளி. 


இவன் இந்த வீட்டைவிட்டு வெளியேறிப் போகும் வரை வள்ளி இவனுடன் தான் அமர்ந்து சாப்பிட்டாள். 


வள்ளி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்தி நேரம் வைக்கோலை அள்ளி மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தான் இவன். 


" ஏ... பெரியப்பா, உன்னைப் பத்தி ஒரு டீச்சர் கேட்டாங்க" என்று மஞ்சள் பையைத் தோளில் போட்டபடி, கள்ளம் இல்லா சிரிப்பொலியோடு வள்ளி வந்து நின்றாள்.


" யாரு தங்கம் ?" தங்கம் என்று செல்லமாக வள்ளியை அழைப்பது இவன் வழக்கம்.


" வாணி டீச்சர். புதுசா ஆறாம் வகுப்புக்கு இங்லீஷ் சொல்லித்தர வர்ராங்க. அவிங்க உங்களோட படிச்சாங்களாம். அவீங்க உங்களோட பேசனும்னு சொன்னாங்க.‌நாளைக்கு அந்தியில் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரச் சொன்னாங்க" சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் பேசினாள் வள்ளி.


பள்ளிக் காலத்தில் வாணியின் மீது இவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பைக் குறித்து ஒரு முறை கூட அவளிடம் இவன் சொன்னது கிடையாது. பள்ளி காலத்திற்குப் பிறகு வாணிக்குத் திருமணம் ஆன செய்தியை மட்டும் கேள்விப் பட்டிருந்தான். மற்றபடி வேறு எந்த தகவலும் இப்போது வரை இவனுக்குத் தெரியாது.


இவன் தெப்பக்குளத்தில் வாணியை சந்தித்தபிறகு இவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம். வாணி அவள் கணவனால் கைவிடப் பட்டுவிட்டாள். காரணம் இவளால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக் காலத்திலிருந்து அவள் மீது இவனுக்கு ஈர்ப்பு உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் துணையாக்கிக் கொண்டார்கள். தன் தம்பி வீட்டை விட்டு விட்டு வாணியுடன் வாழ ஆரம்பித்தான் இவன். முறையான திருமணம் எதையும் இவர்கள் செய்து கொள்ளவில்லை. மனம் பொருந்தி வாழ்ந்தார்கள். வள்ளிக்கு தன் பெரியப்பாவை அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமும் இருக்கவே செய்தது.


காலம் எவ்வளவு வேகமானது என்பதை வாழ்ந்து முடித்தவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் கண்ணிமைக்கும் நொடிதான் வாழ்க்கையைத் தின்றுவிட்டும் காலம் என்று.


வள்ளி நேற்றுதான் சிறு பிள்ளையாக இருந்தாள் . இன்று அவள் வளர்ந்துவிட்டாள். அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நான்கு வருடத்தில் வள்ளி இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானாள். வள்ளியின் தம்பிக்கு ஒரு நாள் திருமணம் நடந்தது. அவனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டான். 


வள்ளி தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தாள். காட்டாறு கூட கொஞ்சம் மெதுவாகப் போகும் போல , ஆனால் காலம் வெகு விரைவாகப் போனது. 


எல்லாம் மாறிப் போன,வாணி ஒருநாள் இறந்து போனாள். இவன் மீண்டும் ஒண்டிக் கட்டையானான். இவனுக்கு என்று பிரித்து விடப்பட்ட நிலத்தில் ஒரு குடிசைப் போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தான். இவன் தம்பியும் ,வள்ளியின் அப்பவும் ஒரு நாள் இறந்து போனான். அன்று வள்ளி அழுத அழுகை சொல்ல முடியாதது. ஒரு நாள் அவள் தாயும் இறந்து போனாள். ஒருநாள் வள்ளியின் கணவனும் இறந்து போனான்.


ஒரு நாள் ஓட்டையில் தூண்டில் போட்டபடி இவன் அமர்ந்திருந்தான். யாரோ பின்னால் நடந்து வந்தார்கள். மெல்லத் திரும்பிப் பார்த்தான். வள்ளி இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நேற்றுதான் அவளைச் சிறுவியாகப் பார்த்த நினைப்பு அவனுக்கு.


" பெரியப்பா, மீன் பிடிக்கிறியா?"


" ஆமா தங்கம்"


" கொடு, நான் பிடிக்கிறேன்" என்று தூண்டிலை வாங்கிக் கொண்டாள். இருவரும் பாத்திரம் நிறைய மீன் பிடித்தார்கள். வள்ளி தான் மீன் குழம்பு வைத்தாள். மிக அட்டகாசமாகச் சமைத்திருந்தாள்.


" தங்கம் எப்ப ஊருக்கு போற?" 


"நாளைக்குப் பெரியப்பா"


" ஏன் போற?"


" என் வீட்டுக்குப் போய் தானே ஆகனும்?"


" உன் அப்பா உயிரோடு இருந்து , அவரு தனியாக இருந்தால் அவரை பார்த்துக் கொண்டு கூட இருக்க மாட்டியா?"


வள்ளி தலையை நிமிர்த்தி இவனைப் பார்த்தாள்.


" எனக்கு வாரிசுனு யாருமில்லை. என் நிலத்தை நீயே எடுத்துக் கொள். என் கூடவே இருந்து விடு" தயங்கிப்படி கேட்டான்.


"நானே கேட்காலாம்னு நினைச்சேன். நீயே சொல்லிடப் பெரியப்பா. எனக்கும் தனியாக இருக்கப் பிடிக்கல. நான் உன்னைப் பார்த்துக் கொண்டு உன்னோடே இருந்துவிடுறேன் பெரியப்பா" என்றாள் வள்ளி. 


அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினான் இவன்.





சனி, 19 நவம்பர், 2022

பொட்டல் (சிறுகதை)

 



" ஏ... தம்பி, நில்லுப்பா" அந்த குரல் வெற்று வெளியில் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தபின், நெற்றியில் வியர்வை துளிர்க்கக் குரலின் ஆதாரத்தைத் தேடினான். கண்களின் பார்வைக்குத் தட்டுப்படாமல் குரலின் ஆதாரம் எங்கோ இருந்துவிட, உச்சி நேரம் உள்ளத்தில் கிலியை விதைத்தது. பாட்டி சொன்ன கதைகளில் உள்ள பல்லை இளிக்கும் பேய்கள் அக திரையில் ஓடி வேடிக்கை காட்டின. தயக்கத்துடன் அவன் திரும்பி நடந்தான். " ஏ... தம்பி நில்லுப்பா" மீண்டும் அதே குரல். இப்போதும் குரலின் ஆதாரம் தென்படவில்லை. கதிரவனைத் தவிர வானத்திலும் யாருமில்லை. தூரத்தில் தெரியும் ஒற்றை மரத்தைத் தவிர அவன் கண்ணுக்கு வேறு எதுவும் புலப்படவில்லை.



"ஏ... தம்பி நில்லுப்பா" 


" ஏ... தம்பி நில்லுப்பா" 


" ஏ... தம்பி நில்லுப்பா" 


அந்த குரல் திரும்ப ,திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் நிற்காமல் நடந்தான். பொட்டல் காட்டின் நடுவே புழுதியான வெக்கை நிறைந்த அந்த மண் அவனின் வெற்று கால்களுக்கு வெப்பத்தைப் பரிசாகத் தந்து கொண்டிருந்தது. இந்த பொட்டல் வழியாக இதுவரை யாரும் போனதில்லை. இந்த பொட்டல் வழியாக  நாயோ, பூனையோ தவறியும் நுழைவதில்லை. அப்படி நுழைந்த எதுவும் திரும்பி வந்ததில்லை.



காலையில் அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டான். அந்த கோபம்தான் அவனை இந்த பக்கம் உந்தி தள்ளிய விசை. அம்மா பேசியது அப்படியே அவனுக்கு உள்ளத்தில் வந்து நின்றது.


" அடே.... பாவி என்னடா பண்ணி வச்சிருக்க , உங்கோப்பன போல நீயும் கொலக்கார பாவி ஆவலாமுனு இப்படி பண்ணியா... அந்த புள்ள என்ன பாவமடா பண்ணுச்சி... அதை ஏன்டா அடிச்சி மண்டைய ஒடச்ச... நாசமா போரவனே... இனிமே நீ ஊட்டுக்கு வரதடா... எங்கேயே போ பரதேசமா... போட" கோபமும் , வருத்தமும் கலந்த அம்மாவின் குரல் இவன் உள்ளத்தின் பதிவுகளில் ஆழமாகப் பதிந்திருந்தது.


காந்திமதி அவனுடைய  மாமன் மகள் வயது பன்னிரண்டு. அவனுக்கு அவள் மேல் ஆழமான பிரியம். ஆனால் அந்த பெண்ணுக்கு எப்போதும் அவனைப் பிடிக்காது. அவனுக்கு வயது பதினான்கு. பல முறை அவளை நெருங்கி " நாம பெரிசானதும் உன்னை நாதான் கட்டிகிடுவேன். என்ன சரியா? " என்று கேட்பான்.


 அவளோ " உன்ன நாயி கூட கட்டிக்காது. எங்கிட்ட வந்து பேசுற வேலையெல்லாம் வச்சுகாத" என்று சொல்வாள். இப்படி அவள் சொல்வதை எப்போதும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான் அவன்.


ஆனால் இன்று தன் நண்பன் ரங்கசாமியுடன் பள்ளிக் கூடம் போகும் போது , வழியில் காந்திமதி தன் தோழிகளுடன் இவர்களுக்கு முன் போய்க் கொண்டிருந்தாள்.


" உன் மாமன் பொண்ணு காந்திமதி முன்ன போறா" என்று ரங்கசாமி சொன்னதும். 


" ஆமா, அதுக்கு என்ன இப்ப?" என்றான் அவன்.


" அவகிட்ட போய் , உன்னை நான்தான் கட்டிகிடுவேனு சொல்லுப் பார்போம்" 


" வேணாடா, கூட்டாளி புள்ளைங்களோட போறா" 


" அது என்ன இப்ப? தைரியமான ஆம்பளைய இருந்தா போய் சொல்லுப் பார்ப்போம்" 


" சும்மா இருடா"


"பயந்தாங்கொள்ளி"


" நான் இப்போ போய் அவகிட்ட சொல்லிட்டா, நீ உன் காத அறுத்துகிறியா சொல்லு? நான் போய் சொல்றேன்"


" எங்கிட்ட பத்துரூவா இருக்கு. நீ அவகிட்ட சொல்லிட்டா, இந்த பத்துரூவா உனக்குத்தான்" என்று பத்து ரூபாய் நோட்டு ஒன்றை தன் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினான் ரங்கசாமி.


" மெய்யாலுமா?"


" மெய்யாலும், பத்துரூவா உனக்குத்தான்" என்று ரங்கசாமி சொல்ல, இவன் வேகமாக நடந்து காந்தி மதியின் அருகில் போனான்.


" நான் தான் உன்னை கட்டிகிடுவேன்" அவள் காதருகில் சத்தமாகச் சொல்லிவிட்டு அவன் நிற்க. ரங்கசாமி அவன் பின்னால் வந்து நின்றான். 


" கொலைகாரன் மகனுக்கு என்னை கட்டிகிடனுமா? நீயும் உங்கோப்பன போல ஜெயிலுக்குத் தான் போக பேற. எங்கிட்ட வராத நாயே" அதீத வெறுப்புடன் காந்தி மதி சொன்னாள். கூட இருந்த பெண் பிள்ளைகள் எல்லோரும் கலகல என்று சிரித்துவிட , அவன் பின் நின்ற ரங்கசாமியும் சிரித்துவிட, அவனின் உள்ளத்தில் இனம்புரியாத புயல் போன்ற சீற்றம் ஒன்று கிளம்பி அவன் உச்சந்தலையில் மோதியது. 


சீற்றம் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிடும். தன் பையிலிருந்த இரும்பு அடிக்கோலை எடுத்து காந்திமதி தலையில் ஓங்கி அடித்து விட்டான் அவன். காந்திமதி தலையில் குருதி வெள்ளம் பெருகி, முகம் எல்லாம் பரவ அவள் மயங்கி விழுந்தாள்.


கூட இருந்த பெண் பிள்ளைகள் அலற, ரங்கசாமி என்ன செய்வது என்று தெரியாது நிற்க. பக்கத்து வயலில் ஏர் உழுது கொண்டிருந்த மல்லைய கிழவர் ,பெண் பிள்ளைகளின் சத்தம் கேட்டு ஏரை நிறுத்திவிட்டு ஓடி வந்தார். அவனுக்குப் புரிந்தது எல்லாம் எல்லை மீறிப் போய்விட்டதென்று. ஓடினான் வீட்டை நோக்கி... அடுத்த அரை மணி நேரத்தில் அம்மாவும் துரத்த... கோபமும் ,கிலியுமாக இந்த பொட்டலுக்குள் நுழைந்து விட்டான் அவன்.


அவன் பொட்டலுக்குள் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. இந்த பொட்டலைக் குறித்துப் பல கதைகள் உண்டு. அந்த கதைகளை அவன் பாட்டி அவனுக்குச் சொல்லிருக்கிறாள்.


இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தியாவை வெள்ளையர்கள் கட்டுப்படுத்தி வந்தனர். ஜெர்மானியர்களை எதிர் கொள்ள இங்கிலாந்து அரசுக்கு உதவப் பல ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். அப்படி முயன்ற ஒரு வெள்ளைக்காரன் ராபர்ட். அந்த ராபர்ட் இந்த பொட்டலில் ஓர் ஆய்வுக் கூடத்தை நிறுவி, அதில் ஏதோ ஆய்வுகளைச் செய்து வந்திருக்கிறான்.


ஒரு நாள் விடியற்காலையில் பயங்கரமான ஓசை இந்த பொட்டல் பகுதியில் கேட்டிருக்கிறது. இந்த ஊரார் ஜப்பான் காரன் குண்டு போடுகிறான் என்று பயந்து வீட்டிலே ஒடுங்கி விட்டனர். வெகுநேரம் கழித்து வெளியே வந்த ஊர் மக்கள் என்ன ?ஏது ? என்று குழம்பி நின்று இருக்கிறார்கள். ஊரிலிருந்து வாலிபர்கள் நால்வர் பொட்டலுக்குள் புகுந்து என்ன நடந்து என்று தெரிந்து கொள்ள போயிருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள்தான் யாரும் திரும்பவில்லை. நாய் ,பூனை என்று எந்த உயிரினங்களும் அந்த பொட்டல் நிலத்தில் நுழையாததைக் கண்ட ஊர் மக்கள் அந்த பொட்டலை ஒதுக்கி வைத்துவிட்டனர். அந்த பொட்டல் ஒரு தீட்டு பட்ட இடம் என்று ஒதுக்கிவிட்டனர். இதுதான் அவன் பாட்டி இந்த பொட்டலைக் குறித்துச் சொன்ன கதை.


இதைத் தவிரவும் இந்த பொட்டலில் அந்த ராபர்ட், குருதி குடிக்கும் பேயாக அலைகிறான் என்ற ஒரு கதையும் உண்டு. இது மட்டும் அல்லாமல் ராபர்ட் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு சென்றதாகவும், அவள் அவனைத் தீஞ்சொல் கொண்டு சாபம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அதனால் இந்த பொட்டல் தீட்டு பட்ட இடமாகிவிட்டது என்று சொல்வாரும் உண்டு. எது எப்படியோ இப்போது அவன் இந்த பொட்டலில் இருக்கிறான்.


" ஏ... தம்பி, நில்லுப்பா" இந்த குரல் அவனுக்குக் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த பொட்டலில் நடந்து, நடந்து அவன் கால்கள் வலித்தன. அந்த பொட்டல் முடிவில்லா பெருவெளி போல் நீண்டு கொண்டே இருந்தது. இந்த பொட்டலைவிட்டு வெளியேற வழி தேடி அழைத்தான். எங்கும் ஒரே பொட்டல் மட்டுமே அவன் கண்களுக்குத் தென்பட்டன.


களைத்துப் போன அவன், தூரத்தில் ஒரு கட்டிடத்தைக் கண்டான். அது பாழடைந்த பழைய கட்டிடம். அதுதான் ராபர்டின்  ஆய்வுக் கூடாக இருக்கவேண்டும் என்று சரியாக ஊகித்தான் . அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தான். நீளமான படிக்கட்டுகள் மண் படிந்து இருந்தன. படிக்கட்டுகளைத் தாண்டி , மேலே ஏறி அந்த கட்டிடத்தின் முன் கதவிடம் வந்தான். கதவு வெறுமனே சாற்றியிருந்தது. அதை கை வைத்துத் தள்ளினான். உள்ளே பெரிய அறை, அறைகலன்கள் தூசி படிந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்க , அறையை நோட்டமிட்டான்.


அறையின் மறு எல்லையில் ஒரு கதவு இருந்தது. அதை நோக்கி நடந்தான். அந்த கதவைத் திறந்தான். உள்ளே இன்னும் ஓர் பெரிய அறை , ஆனால் அறையின் நடுவே மிகப்பெரிய எந்திரம் இருந்தது. அதை நெருங்கிப் போய் அந்த இயந்திரத்தை நோட்டமிட்டான்.


அந்த எந்திரத்தின் முன்பக்கம் போன அவன் மிரண்டு போனான். அங்கே அந்த வெறும் இடத்தில் அதாவது அந்தரத்தில் ஒரு வித்தியாசமான ஓட்டை கருப்பு வண்ணத்திலிருந்தது. அவனுக்கு ஒரே குழப்பம் எப்படி வெறும் இடத்தில் அதாவது அந்தரத்தில் ஓட்டை போட முடியும் என்று. அந்த ஓட்டையின் கருப்பு வண்ணம் மிக வித்தியாசமாக ஒளிர்வது போல அவனுக்குத் தோன்றியது. மெல்ல அதை நெருங்கி அதைத் தொட்டான் அவ்வளவு தான் அவன் உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டான்.


ஆற்றில் ஓட்டத்தில் இழுக்கப்பட்ட ஒருவன்; அதே வேகத்தில் வெளியே தூக்கி எறியப்பட்டால் எப்படி இருக்குமோ அதேபோல் அவன் தூக்கி எறியப்பட்டான். அவன் நிலத்தில் தான் வந்து விழுந்தான். ஆனால் ஒரே இருட்டாக இருந்தது.



தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தை நோக்கி அவன் நடந்தான். அவன் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்க, நடக்க ஏற்கனவே தெரிந்த நிலத்தில் இருப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அந்த வெளிச்சம் ஓர் ஓட்டு வீட்டின் மின்சார விளக்கு. அந்த வீட்டை நெருங்கினான். வீட்டின் முன் பக்கம் ஒரு சிறு திண்ணை இருந்தது. அதில் ஒரு பெண் அமர்ந்து எதையோ அறிந்து கொண்டிருந்தாள். இந்த இடமும் அவனுக்கு நன்றாகப் பழக்கமான இடம்தான். அந்த பெண் சாந்தி அக்காள். அவனுக்கு பெரிய ஆச்சரியம்; சாந்தி அக்காள் போன வருடம் தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிட்டாளே! என்று நினைத்து அவன் மிரண்டான். அவன் விலகி போனான். சாந்தி அவனைப் பார்த்து விட்டாள். 


" ஏ... தம்பி நில்லுப்பா" என்று அவனைக் கூப்பிட்டாள் சாந்தி. அவன் அதிர்ந்து நின்றான். அவன் பொட்டல் நிலத்தில் ஆதாரம் இல்லாமல் கேட்ட அதே குரல்.


அவன் எச்சில் விழுங்கினான். 


" யாரு... இங்க வாடா" சாந்தி கூப்பிட்டாள்.


அவன் பயத்துடன் அவளை நெருங்கினான். 


" அட, தாய்யக்கா மகன். இன்நேரத்திற்கு இங்க என்ன செய்ற?" 


" வெளிக்கி போலானு வந்தேங்'கா" என்றான் அவன். 


" இருட்டு நேரம் பாத்து ஊட்டுக்குப் போ" என்றாள் சாந்தி.


"சரிக்கா " என்று அவன் ஒருபக்கம் நடக்க , " டேய் ,கண்ண எங்கடா வச்சிருக்க , தடம் இங்க இருக்கு " என்று அவள் தடத்தை நோக்கி கை காட்டினாள்.


அவள் காட்டிய தடத்தில் அந்த இருட்டில் வேகமாக நடந்தான். இப்போது இந்த இடம் தெளிவாக அவனுக்கு விளங்கியது. இது அவன் ஊர்தான்.பொட்டல் நிலத்தைவிட்டு தன்னை அந்த எந்திரம் வெளியேற்றிவிட்டது என்று மகிழ்ந்தான். ஆனால் தன் மாமன் மகளின் மண்டையை உடைத்தற்காக அம்மா தன்னை துரத்தினாளே, தன்னை வீட்டில் சேர்த்துக் கொள்வாளா? என்ற கேள்வி இவன் உள்ளத்தில் எழுந்தது.


சாந்தி அக்காள் எப்படி உயிரோடு இருக்கிறாள் என்ற கேள்வியும் அவனுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது. அவன் நடந்து ஊருக்குள் நுழைந்தான். யாரும் அவனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இவன் வீடு ஒரு மேட்டின் மீது இருக்கிறது. அந்த மேட்டை நெருங்கியவன் மீண்டும் மிரண்டு போனான். அவன் வீடு மாடி வீடாக இருந்தது. அவன் வீடு கூரை வீடுதான் ஆனால் எப்படி மாடி வீடானது? அவன் குழம்பிப்போனான்.


அவன் வீட்டை நெருங்கப் பயந்தான். அவன்  வீட்டின் அருகில் இருக்கும் வயலில் பருத்தி விதைக்கப்பட்டிருந்தது. பருத்திச் செடிகள் உயரமாக வளர்ந்து நின்றன. பருத்திக் காட்டுக்குள் புகுந்து மறைந்து நின்று தன் வீட்டைக் கவனித்தான். வீட்டின் முன்பக்கம் பெரிய களம் இருந்தது. அதில் ஒரு கட்டில் கிடந்தது. அவன் பார்த்துக் கொண்டிருக்க , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு அவனும் ,காந்திமதியும் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏதோ பேசி சிரித்தபடி அந்த கட்டிலில் வந்து அமர்ந்தார்கள். பருத்திக் காட்டிலிருந்த அவன் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளானான். அதேநேரம் அவனுக்குக் கொஞ்சம் விளங்கியது. இது தன்னுடைய உலகம் அல்ல; இது வேறு உலகம் என்று அவனுக்குப் புரிந்தது. 


தன் பாடப்புத்தகத்தில் படித்த ஒரு கோட்பாடு அவனுக்கு நினைவுக்கு வந்தது. இணை பேரண்டங்கள் (Parallel universes)என்ற கோட்பாடு தான் அது. இந்த உலகத்தில் தானும் ,காந்திமதியும் நட்புடன் இருக்கிறோமே ? அது எப்படி சாத்தியம் என்று யோசித்தான். அப்போது அவன் வீட்டிலிருந்து வேறு ஒரு நபர் வெளியே வந்தார். அது அவனுடைய அப்பா. இந்த உலகத்தில் தன் அப்பா கொலை செய்யவில்லை அதனால் அவர் சிறைக்குப் போகவில்லை. எனவே இந்த உலகத்தில் அவன் வாழ்க்கை வேறு மாதிரியாக உள்ளது என்பதை உணர்ந்தான்.


இணை பேரண்டங்களில் வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும் என்று படித்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. இது தன்னுடைய உலகம் அல்ல; இது தன்னுடைய வாழ்க்கையும் அல்ல என்று அவனுக்குத் தெரியும். இருந்தும், இந்த உலகத்தின் தான்(அவன்) மகிழ்வாக வாழ்கிறான் என்பது இவனுக்கும் மகிழ்வாக இருந்தது. அந்த இருட்டில் இந்த உலகத்தில் தனக்கான புது வெளிச்சத்தைத் தேடி , அந்த வீட்டைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தான் அவன்.


....

கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...