ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஒரு சாமியின் கதை(சிறுகதை)


 மை இருட்டாக இருந்தது. செல்வி தன் ஏழு மாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு எந்த நேரத்திலும் அப்பன் வீட்டுக்குக் கிளம்பிவிடும் வழக்கம் கொண்டவள் செல்வி. இதுதான் முதல் முறை இருட்டு நேரத்தில் புருஷனிடம் சண்டை போட்டுக்கொண்டு அப்பன் வீட்டுக்கு இவள் போவது. 


தன் மாமியார் சுருக்கு என்று ஒரு சொல், சொல்லி விட்டாள் என்று தன் புருஷனிடம் செல்வி சொன்னபோது "என் அம்மாதானே சொன்னாள். கொஞ்சம் பொறுத்துத்தான் போவேன்" என்று புருஷன் சொன்னதும், இவளுக்கு மூக்கு சிவக்கக் கோபம் தலைக்கேறியது.


" உன் அம்மாவிடம் நொட்டை பேச்சு கேட்டுக்கிட்டு வாழ்வதற்கு வேறு பெண் பார். நான் எங்கள் வீட்டுக்குப் போகிறேன்" என்று கிளம்பி விட்டாள்.


எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தைப்பேற்றுக்கு அப்பன் வீட்டுக்குப் போகிறவள்தான். ஆனால் செல்விக்குக் கொஞ்சம் முன் கோபம் அதிகம்தான். அப்பன் வீட்டில் ஒரே பெண் என்பதால் சுடு சொல் கேட்காமல் வளர்ந்தாள். புருஷன் வீட்டில் சுடு சொல் கேட்காமல் இருக்க முடியாதுதானே.


" இருட்டு நேரத்தில் போகாதேடி. இந்த முறை எல்லாம் உன் பின்னால் வருவேன் என்று நினைக்காதே. உனக்கு இதே வழக்கமாக போச்சு" என்று புருஷன் சொற்கள் இவளுக்கு இன்னும் வீம்பைக் கொடுத்தது. வெறும் கையை வீசிக் கொண்டு கிளம்பி விட்டாள். அப்பன் வீட்டுக்கு ஐந்து மைல் நடந்து போக வேண்டும். கொஞ்சம் தூரத்திற்குத் தான் மாட்டு வண்டி பாதை உண்டு, அதன் பிறகு ஒற்றையடிப் பாதை தான்.


இரண்டு மைல் நடித்திருப்பாள் கால் கடுக்க தொடங்கியது. நேரம் கழிந்தும் உதிக்கும் நிலா மெல்லக் கிழக்கே இருந்து மேலே ஏற தொடங்கியது. தூரத்தில் இருக்கும் கருப்பு சாமி பதி நிலா வெளிச்சம் தெரியத் தொடங்கியது. கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் உட்கார ஏதுவான பலகை கற்கள் உண்டு. வேகமாக நடந்தாள் செல்வி. கருப்பு சாமி பதி அருகிலிருந்த ஒரு கல்லில் அமர்ந்தாள். நிலா வெளிச்சத்தில் மீன் அரித்து வானம் ரம்மியமாகக் காட்சி தந்தது.


" கருப்பு சாமி ஐயனே என் அப்பன் வீட்டுக்குப் போகிற வரை எனக்குக் கால் வலிக்கக் கூடாது" வாய் வீட்டு சொல்லி கை எடுத்துக் கும்பிட்டாள் செல்வி. லேசான காற்று வீசத் தொடங்கியது. செல்வி ஒருவகையான இதத்தை உணர்ந்தாள். மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள் செல்வி.


" தாயி, யாரும்மா? இந்த நேரத்தில்?" என்ற ஆணின் குரல் செல்வியைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.


"யார்?" நிலா ஒளியியல் வேட்டியுடன் நின்ற ஆண் மகனைப் பார்த்துக் கேட்டாள் செல்வி.


" என் பேரு கந்தன் தாயி. நீ எங்கே போற தாயி?" என்று அவளை நெருங்கி வந்து கேட்டான் கந்தன்.


" நான் என் அப்பன் வீட்டுக்குப் போகிறேன். கரட்டுப்பட்டிக்கு போகனும். நீ இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டாள் செல்வி.


"தாயி நான் ஒரு நாடோடி. கிடைத்த வேலையைச் செய்வேன். கிடைத்த இடத்தில் தூங்குவேன். கருப்பு சாமி பதியில் அந்த பாறையில் படுத்திருந்தேன். நீங்கள் சாமி கும்பிட்டதைக் கேட்டு உங்களைக் கவனித்தேன். தனியாகப் போகிறீர்களே கூட யாரும் வரவில்லையா?" என்று கேட்டான் கந்தன்.


" இல்லை" ஒற்றை சொல் பதில் கொடுத்தாள் செல்வி.


"அப்படியானால் நான் உங்கள் ஊர் வரை துணைக்கு வருகிறேன்" என்றான் கந்தன்.


" உனக்கு எதற்குச் சிரமம். நானே போய்விடுவேன்" என்றாள் செல்வி.


" கிட்டத்தட்ட மூன்று மைல் இருக்கும் உங்கள் ஊருக்கு, நானும் துணைக்கு வருகிறேன். வாங்கப் போகலாம் " என்று அவன் முன்னே நடக்க , செல்வி வேறு வழியின்றி அவன் பின்னால் நடந்தாள்.


" ஏன் தாயி இந்நேரத்தில் அப்பன் வீட்டுக்கு போறீங்க?" என்று பேச்சுக் கொடுத்தான் கந்தன்.


" அது... புருஷன் கூட கொஞ்சம் பிணக்கு" என்று சொன்னால் செல்வி.


" குடும்பம் என்றால் சின்ன சின்ன சச்சரவு இருக்கத்தான் செய்யும். அதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் இப்படி பிணக்கு கொண்டு கிளம்பிவிடுவது சரி? என்று கேட்டான் கந்தன்.


செல்விக்கு என் பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் அமைதியாக நடந்தாள்.


" நான் என்ன சொல்றேனு உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அனுசரிப்பு செய்து வாழ்வதுதான் வாழ்க்கை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றெல்லாம் வாழ முடியாது தாயி. மனிதர்களை வெறும் பார்வையால் எடை போடும் உலகமாகிவிட்டது" என்று ஒரு விதமாகப் பேசினான் கந்தன்.


இப்போதும் செல்வி அமைதியாகவே நடந்தாள்.


" உங்களுக்கு நான் சொல்வது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றான் கந்தன்.


" அப்படியில்லை. நீங்கள் சொல்வது புரிகிறது " என்று அமைதியைக் கலைத்தாள் செல்வி.


" நாம் வேறு ஏதாவது பேசுவோம்" என்ற கந்தன். " வெகு நாளுக்கு முன்பு நான் ஒரு பண்ணையாரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த பண்ணையார் நல்ல மனிதர். சொன்ன சம்பளத்தில் குறைக்காமல் கொடுத்து விடுவார். ஒருநாள் அவர் போட்டிருந்த மோதிரம் ஒன்று காணாமல் போய்விட்டது. வேலையாட்கள் யாரேனும் திருடியிருக்க வாய்ப்புள்ளது என்று நான் உட்பட வேலை பார்த்த பதிமூன்று பேரையும் தரவாகச் சோதனை செய்தார்கள். ஆனால் மோதிரம் கிடைக்கவில்லை. ஊரார் எங்களை அடித்து விசாரிக்கச் சொன்னார்கள். ஆனால் எங்கள் பண்ணையார் அப்படிச் செய்யவில்லை. எங்களை அவர் நம்பினார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் வேலை செய்தோம். ஒரு மாதம் கிழிந்திருக்கும். ஒரு நாள் பண்ணையார் மகன் பனைமரத்தில் நூங்கு வெட்ட ஏறினான். ஏறியவன் " அப்பா, உங்கள் மோதிரம் இங்கே காக்கை கூட்டில் இருக்கிறது" என்று கீழே நின்ற பண்ணையாரைப் பார்த்துக் கத்தினான். காக்கை ஏதோ உணவு என்று பண்ணையார் மோதிரத்தைக் கழற்றி வைத்த நேரத்தில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்தோம். எங்கள் பண்ணையார் எங்கள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை." என்ற கந்தன் கொஞ்சம் கதையை நிறுத்தினான். 


" அந்த பண்ணையார் இறந்தபிறகு எங்களுக்கு வேலை இல்லாமல் போனது. ஒவ்வொருத்தரும் அவர் அவர் வழியில் போனோம். சில நாட்கள் உணவு இல்லாமல் எல்லாம் இருந்திருக்கிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலை கிடைக்கும். எதுவும் நிரந்தர வேலையாக அமையவில்லை. என் போதாத காலம் நான் அந்த கழுத்தணியை பறித்திருக்கக் கூடாது. ஆனால் ஒன்றைச் சொல்கிறேன் தாயி . நான் கெட்டவன் கிடையாது" கந்தன் பேசுவது செல்விக்கு விளங்கவில்லை.


"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை" என்றாள் செல்வி.


அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான். " நான் ஒன்றும் கேட்டால் செய்வீர்களா தாயி?" என்றான் கந்தன்.


"என்ன?" என்றாள் செல்வி.


"கருப்பு சாமி பதியில் ஓரமாக ஒரு இடம் பார்த்து புது சாமி ஒன்றை நீங்கள் வைக்க வேண்டும். செய்வீர்களா" என்று கேட்டான் கந்தன்.


" எந்த சாமிக்கு?" என்று கேட்டாள் செல்வி.


" ஊர் வந்துவிட்டது தாயி. இனிமே நீங்கப் போய்விடுங்கள் " என்று பேச்சை மாற்றி நின்றான் கந்தன்.


" எந்த சாமிக்கு என்று கேட்டேனே?" என்றாள் செல்வி.


" கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் என்ன நடந்தது என்று உன் அம்மாவிடம் கேளுங்கள் அப்போது புரியும் " என்று சொன்னவன் திரும்பி நடந்தான். நிலாவின் ஒளியில் தேவன் போல அவன் நடந்தான்.


செல்வி தன் அப்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். இரண்டு நாள் கழிந்தது. செல்வியின் அம்மா ,செல்விக்குத் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


" அம்மா , உன்னிடம் ஒன்று கேட்கவா?" என்றாள் செல்வி.


" என்னடி? " என்றாள் அம்மா.


" கருப்பு சாமி பதி அருகில் ஏதாவது நடந்ததா?" என்று கேட்டாள் செல்வி.


" பொதுவாகக் கேட்டால் என்னடி செல்ல?" என்றாள் அம்மா.


" இல்லமா , நான் வந்த இரவு கருப்பு சாமி பதி இருக்கும் இடத்தில் ஒரு ஆளைப் பார்த்தேன். அவர் எனக்குத் துணையாக ஊர் வரை வந்தார். கருப்பு சாமி பதியில் ஓரத்தில் ஒரு சாமியை வைக்கச் சொன்னார். அதனால்தான் கேட்டேன்" என்றாள் செல்வி.


" யாருடி துணைக்கு வந்தது?" என்று கேட்டாள் அம்மா.


" கந்தன் என்று சொன்னார்" என்றாள் செல்வி.


" கந்தனா? அம்மா வியந்து கேட்டாள்.


" கந்தனை உனக்குத் தெரியுமா?" என்றாள் செல்வி.


"அடியே மகளே. என் கழுத்திலிருந்து நகையைப்‌ பறித்துக் கொண்டு போன நாடோடி பயல் தான் கந்தன். அவனைக் கருப்பு சாமி பதி அருகில்தான் ஊரார் பிடித்துக் கட்டி வைத்து அடித்தே கொன்றார்கள். அவன் எப்படி உனக்குத் துணையாக வர முடியும். இந்த நிகழ்வு எல்லாம் நீ பிறப்பதற்கு முன்பே நடந்தது" என்று வியந்து கேட்டாள் அம்மா.


செல்விக்கு என் சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கு எல்லாம் புரிந்தது. அடுத்த ஆறு மாதம் கழித்து ஆற்றில் கல் எடுத்து கந்தசாமி என்ற புது சாமியை , கருப்பு சாமி பதியில் வைத்தாள் செல்வி. ஊரார் இப்போது கருப்பு சாமியுடன் ,கந்தசாமியையும் கும்பிடுகிறார்கள்.







புதன், 21 டிசம்பர், 2022

மெய்யைத் தொலைத்து

 



" நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?" இது அந்த பெண்ணின் கேள்வி.


"தெரியவில்லை" இது அந்த பொடியனின் பதில்.


அந்த பொடியன் கையில் ஒரு தொங்கும் விளக்கைப் பிடித்திருந்தான்.


" உனக்கும் நாம் எங்கே போகிறோம் என்று தெரியாதா?" மீண்டும் கேட்டாள் பெண்.


" அவர் சொன்னபடி இங்கே நிற்கிறேன். ஒரு பெண் வருவாள் என்று சொல்லி விட்டு, நீங்கள் வந்ததும் வடக்கு பக்கமாக மோகினி சிலை இருக்கிற இடத்தில் வந்து நம்மை நிற்கச் சொன்னார்" என்றான் பொடியன்.


அப்படியா,சரி வா போகலாம்" அடர்ந்த காட்டில் அந்த பெண்ணும் , அந்த பொடியனும் வடக்குப் பக்கமாக நடந்தனர். மரங்கள் அடர்ந்து கடுமையான பாதையாக அது இருந்தது.


பிரமாண்டமான மோகினி சிலை அது. மோகினி வடிவத்தில் ஈர்க்கும் நளினமாக நின்றாள். இருவரும் அந்த சிலை நெருங்கினார்கள். சிலை சட்டென்று உயிர் பெற்றது.


" யார் பலி?" என்று உரக்கக் கேட்டது மோகினி. இந்த விளையாட்டு இந்த இடத்தில் இப்படி அமைக்கப்படவில்லையே! என்று மெய் நிகர் (VR - Virtual Reality Game) விளையாட்டைத் தன்னை கொண்டு சோதித்துக் கொண்டிருந்த நித்யா குழம்பி, மெய் நிகர் விளையாட்டு கருவியை தன் தலையிலிருந்து எடுக்க முயன்றாள். ஆனால் எல்லாம் கை மிஞ்சிவிட்டது. அந்த விளையாட்டில் இவளுடைய பாத்திரமான அந்த பெண்ணின் தலையைத் துண்டானது. நித்யா வித்தியாசமாக உணர்ந்தாள். அவள் கதாபாத்திரத்தைக் கொன்றது அந்த விளையாட்டில் தானியங்கி கதாபாத்திரமான அந்த பொடியனின் கதாபாத்திரம்.


"என்ன இது?" நித்யா வாய்விட்டுச் சொல்லும் நேரம் , அவளுக்குள் யாரோ நுழைந்து.... பிழை (Error) ..பிழை ... கணினி எச்சரிக்கை செய்தது.


நித்யா மெய் நிகர் கருவி தலையிலிருந்து எடுத்தாள். ஆனால் அவள் குணத்தால் நித்யா இல்லை.


" இது தான் நீங்கள் வாழும் உலகமா? ஹா,ஹா உங்கள் உலகத்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இந்த பொடியன் அறியப் போகிறான்" என்றாள் நித்யா. அது நித்யா அல்ல; அது பொடியன்.


அந்த அறையில் முழுவதையும் புரட்டிப் போட்டாள் நித்யா. ஒரு இரும்பு தடியைக் கண்டு எடுத்தாள். அவள் இருந்தது அந்த விளையாட்டு நிறுவன கட்டிலில் எட்டாவது தளம். அந்த இரும்பு தடியைக் கொண்டு நித்யா கொன்ற நபர்களின் எண்ணிக்கை பதிமூன்று பேர். நித்யா செய்யவிருந்த பதினான்காம் கொலை ஒரு காவல் அதிகாரியின் துப்பாக்கி துண்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.


அடுத்த நாள் முக்கிய செய்தி இந்த நிகழ்வுதான். ஆனால் சிக்கல் இத்தோடு முடியவில்லை. அடுத்த வாரம் இந்த மெய் நிகர் விளையாட்டு சந்தைக்கு வரவிருக்கிறது.... மீண்டும் பொடியன் வருவான்.


(ஹாஹாஹா முற்றும்?)




திங்கள், 19 டிசம்பர், 2022

ஓங்கில் உலகம் (சிறுகதை)


 

முருகன் புதிய கோளத்தைத் தேடி தன் விண் ஓடத்தை வெளி-காலத்திற்கு மத்தியில் செலுத்திக் கொண்டிருந்தான். முருகன் இன்னும் சில வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்கப் போகிறான். அவனுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அரிதானது. உடு திரள் மத்தியில் பயணிக்கும் அளவுக்கு மனிதர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட்டாலும் , சில நோய்களுக்கு மனிதர்களால் தீர்வு காணமுடிவில்லை என்பது மெய்.


உடு திரளின் வெளிப்புறத்தில் ஒரு சிறு கோளம் மனிதனின் முதன்மை தேவையான தண்ணீரைக் கொண்டிருந்தது. அதில் தரையிறங்கினான் முருகன். அந்த கோளத்தில் தண்ணீர் இருந்தாலும் , முறையான பாதுகாப்பு மூச்சு கருவி இல்லாமல் மூச்சு விட முடியாது. முருகன் தற்காப்புடன் அந்த கோளத்தில் தன் வாழா தேவையான செயற்கையான பகுதியை உருவாக்கிக் கொண்டான். இந்த கோளத்தில் ஆறு மணி நேரம் பகல், ஆறு மணிநேரம் இரவுப் பொழுதாகவும் இருந்தது. பன்னிரண்டு மணி நேரம் ஒரு நாள் என்ற கணக்கில் ஒரு மாதம் கழிந்தது.


முருகன் பாதுகாப்பு மூச்சு கருவியை அணிந்து கொண்டு அந்த கோளத்தின் கடல் கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தான். கடல் அடர் கறுநீலத்தில் சிறு சிறு அலைகளுடன் ஆர்ப்பாட்டமே இல்லாமல் பெரிய மிருகம் ஒன்று அமைதியாக மூச்சு விடுவது போலக் காட்சி தந்தது. தூரத்தில் ஒரு சிறு குன்று தென்பட்டது. அந்த குன்றை இங்கே வந்ததிலிருந்தே முருகன் கவனித்திருக்கிறான், ஆனால் அதன் அருகில் போனதில்லை. இன்று அதை நெருங்கிப் பார்த்துவிடுவது என்ற முடிவுடன் நடந்தான்.


அந்த குன்றை நெருங்கி அதை கவனித்தான். அந்த குன்று கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதன் மீது படிந்திருந்த மண்ணை கையால் தேய்த்துப் பார்த்தான். அந்த குன்று வெண் பளிங்கு தன்மையைக் கொண்டிருந்தது. உதிரியான பளிங்குக் கற்களைத் தனியாகப் பெயர்த்து எடுக்க முடிந்தது. அதில் ஒரு பளிங்குக் கல்லைக் கையில் எடுத்தான். அவன் கையுறைகள் அணிந்திருந்தான். ஒரு கையிலிருந்து கையுறையைக் கழற்றிவிட்டு அந்த பளிங்குக் கல்லைத் தொட்டுப் பார்த்தான். அப்போது மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தான். அவன் நினைவுகள் எல்லாம் உறிஞ்சப்படுவது போல உணர்ந்த முருகன், சட்டென்று அந்த கல்லைக் கடலில் தூக்கி எறிந்து விட்டான்.


முருகனுக்குக் கொஞ்சம் மயக்கம் வருவது போல் இருந்ததால் அவன் உடனே தன் பாதுகாப்பு அமைப்புக்குத் திரும்பினான். படுகையில் படுத்தவன் உறங்கிப்போனான். இரண்டு நாட்கள் கழித்துத்தான் கண்விழித்தான். எழுந்தவன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு அசைபோட்டவன். மீண்டும் மூச்சு கருவியை எடுத்து அணிந்து கொண்டு தன் பாதுகாப்பு அமைப்பை விட்டு வெளியேறி வந்த முருகன் கடலை நோக்கி நடந்தான். கடலை கவனித்தான். அவனுக்கு அமைதியான மிருகமாகவே கடல் தெரிந்தது. கடல் தண்ணீரில் நேரடியாக அவன் காலை வைத்தது கிடையாது. பாதுகாப்பு உடையுடன் தான் கடலில் தண்ணீர் எடுப்பான். இப்போது கடல் அவனை அழைப்பது போல அவனுக்குப் பட்டது. அவன் கடலை நெருங்கி தண்ணீரில் கால் வைத்தான். பாதுகாப்பு உடையில்தான் இருந்தான்.


" கடலுக்குள் வா" என்ற மர்ம குரல் அவன் காதுகளை எட்டியது. முருகன் வியந்து போனான். அந்த குரல் தமிழிலிருந்ததுதான் அவனுக்கு வியப்பு. மனிதர்கள் மத்தியில் ஆங்கிலமே முதன்மை மொழியாகப் பயன்பாட்டில் இருக்கிறது. அப்படி இருக்க தன் தாய் தனக்குச் சொல்லிக் கொடுத்த பழம்பெரும் மொழியில் அந்த குரல் இருக்க முருகன் பெரும் வியப்புக்கு உள்ளானான்.


" தயங்க வேண்டாம். உனக்கு எந்த தீங்கும் நேராது. கடலுக்குள் இறங்கி வா. அஞ்சாதே " என்று மூன்று அந்த குரல் மர்மமாக ஒலித்தது. இன்னும் சில வருடங்களில் இறக்கப் போகும் தான். வாழ்க்கையைத் தனிமையில் கழிக்கிறேன். ஆனது ஆகட்டும் என்று கடலில் இறங்கினான் முருகன். அவன் கடலில் இறங்க, இறங்கத் தண்ணீர் அவனை விழுங்கியது. சட்டென்று அவன் முழுவதும் மூழ்கியது அவனைச் சுற்றி ஒரு காற்று குமிழி அவனை உள் வாங்கிக் கொண்டு அவனைக் கடலின் ஆழத்திற்கு எடுத்துச் சென்றது.


அந்த ஆழத்தில் மிக நுட்பமான, ஒளிரும் பாசிகள் மூலம் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள் பிரமாண்டமாக அவனுக்குக் கட்சி அளித்தன. அவன் அந்த கட்டமைப்பின் மத்திய பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்த கட்டமைப்புகளிலிருந்து ஓங்கில் மீன் அமைப்பு கொண்ட உயிரினங்கள் வெளிப்பட்டன. அவன் முன் ஓர் ஓங்கில் மீன் மிதந்து வந்தது. அங்கிருந்த அனைத்து ஓங்கில்களுக்கும் மூன்று விரல்கள் கொண்ட இரண்டு சிறு கைகள் இருந்தன.


அவன் முன் வந்த ஓங்கில் மீன் தன் கையில் ஒரு பளிங்குக் கல்லை வைத்திருந்து.


" இந்த கல் மூலம் உன் இருப்பை நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்த கல்லில் உன் நினைவுகள் பதிவாகியுள்ளது. உன் தாய் மொழியையும் இதைக் கெண்டே நான் அறிந்தேன்‌. வேறு கோளத்திலிருந்து எங்கள் கோளத்தில் குடியேறியிருக்கிறாய்" என்ற குரல் மட்டும் கேட்டது.


"ஆம் " என்றான் முருகன்.


" நீ இங்கே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. உன்னைத் தொடர்ந்து உன் இனத்தவர் இங்கே வர வாய்ப்புள்ளது. உன் இனத்தவர் "மனிதர்கள் " என்று அறியப்படுகிறீர்கள். உள்ளத்தில் ஒன்று வைத்து , புறத்தில் ஒன்று பேசும் ஆபத்தான இனம் உன் இனம். உங்கள் இனத்தால் எங்கள் உலகிற்கு ஆபத்து வருவது நாங்கள் விரும்பவில்லை" குரல் மட்டும் கேட்டது. அந்த ஓங்கில் மீன் வாய் அசையவில்லை.


" நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் என்னைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். நான் சில வருடங்களில் இறந்து விடுவேன்" என்றான் முருகன்.


" அது எங்களுக்குத் தெரியும். உன் நினைவில் அதைப் பார்த்தோம். உன் இனத்தவர்களை நினைத்தே நாங்கள் அஞ்சுகிறோம். நாங்கள் ஓர் உதவியை உனக்குச் செய்கிறோம். அதற்குப் பதிலாக எங்களுக்கு ஓர் உதவியை நீ செய்ய வேண்டும் " என்று குரல் கேட்டது.


" என்ன உதவி?" என்றான் முருகன்.


" உன் நோய்க்கு நாங்கள் தீர்வு தருகிறோம். அதே நேரத்தில் நீ இந்த கோளம் முழுவதும் மனித தொழில்நுட்ப பார்வையிலிருந்து மறக்கக் கூடிய கருவியை உருவாக்கித் தரவேண்டும். என் சொல்கிறாய்" என்றது குரல்.


" உங்களால் என் நோயைச் சரி செய்துவிட முடியுமா?" என்றான் முருகன்.


"இந்த கடலில் கிடைக்கும் சில கனிமங்கள் உன் உடலில் செயல்படத் தகுதியானவை. அவை கொண்டு ஒரு மருந்தை எங்களால் உருவாக்க முடியும். அது உனக்கு நீண்ட ஆயுளை அளிக்கும். உன்னால் எங்களுக்குத் தேவையான கருவியை உருவாக்க முடியுமா?" என்றது குரல்.


"முடியும் " என்றான் முருகன். முருகன் மிகச்சிறந்த பொறியாளன்.


அடுத்த ஒரு மாதத்தில் முருகன் அந்த கருவியை உருவாக்கி விட்டான். ஒன்று மேற்பட்ட கருவிகளை உருவாக்கி அந்த கோளம் முழுவதும் பதித்தான் முருகன். எந்த மனித தொழில்நுட்பமும் இந்த கோளத்தை அடையாளம் காணமுடியாது.


முருகனுக்கு நோய்க்கு மருந்து கிடைத்தது. மருந்துடன் இந்த கோளத்தை விட்டு வெளியேறினான் முருகன்.


மனித கணக்குப்படி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முருகன் வாழ்ந்தான் என்று சொல்லப்படுகிறது.



முற்றும்.



சனி, 3 டிசம்பர், 2022

துணை (சிறுகதை)

 



அவன் வருகையைக் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. தன்னால் சொந்தக் காலில் நின்றுவிட முடியும் என்று நம்பி , குடும்பத்தை விட்டுப் போனவன். அவன் தொட்ட எதுவும் துளிர்க்க வில்லை. தான் வாழ்க்கையில் அடைய நினைத்த அனைத்தையும் பிறர் அடைவதைக் கண்டு ஏங்கியிருக்கிறான். தானும் ஒரு நாள் நினைத்ததை அடைந்தே தீருவோன் என்று நம்பினான். இப்போது அவனுக்கு அந்த நம்பிக்கை கொடுத்த அயர்ச்சி மட்டுமே மிச்சம்.


வீட்டுக்கு வந்தவனை யாரும் பெரிதாக அக்கறை கொண்டு வரவேற்கவில்லை. தம்பியின் வீட்டில் ஒரு சிறு அறையில் தங்கிக் கொண்டான். இவன் தம்பி நல்ல சம்பாத்தியத்தில் இருப்பவன். இவனுக்குச் சாப்பாடு போடுவதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை. இவன் தம்பிக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் , ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். பெண் குழந்தை நான்காம் வகுப்பு படிக்கிறாள். 


முதல் வாரம் வயலில் இருக்கும் சிறு சிறு வேலைகளைச் செய்து நேரத்தை ஓட்டினான். இரவு வந்ததும் தன் அறையில் வந்து அடைந்து கொள்வான். ஏதாவது புத்தகம் ஒன்றில் மூழ்கிவிடுவான். காலை , மதியம் மற்றும் மாலை மூன்று நேரமும் சாப்பாட்டை ஒரு தட்டில் போடப்பட்டு மூடி வைத்து விடுவாள் தம்பி மனைவி. சாப்பாட்டில் இவனுக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் தனிமை இவன் மனதில் இறுக்கத்தை வளர்த்துக் கொண்டு வந்தது.


ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகிலிருந்த ஓடையில் தூண்டில் ஒன்றைப் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் இவன். கொலுசு அணிந்த யாரோ தயங்கித் தயங்கி நடந்து வரும் ஓசையை இவன் கேட்டான். இவன் மெல்ல ஓரக் கண்ணால் பார்த்தான். குட்டப் பாவாடையும், சட்டையும் அணிந்து கொண்டு , இரட்டை ஜடையுடன் , கையில் ஒரு பழைய தூண்டிலைப் பிடித்தபடி இவன் பின்னால் வந்து நின்றாள் தம்பி மகள் வள்ளி.


இவன் வீடு திரும்பியதிலிருந்து இதுவரை இவனிடம் ஒரு வார்த்தையும் பேசியதில்லை வள்ளியும் ,இவள் தம்பியும். இவன் வள்ளி பிறக்கும் முன்னே ஊரைவிட்டுப் போனவன்.


இவன் வள்ளியிடம் எதுவும் பேசாமல் தூண்டிலை கவனித்தபடியே கல்லில் அமர்ந்திருந்தான். வள்ளிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மெல்ல இவன் நெருங்கி நின்று " இதுல எப்படி மீன் பிடிக்கிறது. எனக்குச் சொல்லி தருவியா பெரியப்பா?" என்று தயங்கிக் கேட்டாள்.


" உன் பேரு என்னனு சொன்னியான உனக்குத் தூண்டில் போட கற்று தாரேன்" என்று வள்ளியிடம் வேடிக்கையாகச் சொன்னான்.


" என் பேரு வள்ளி. பெரியப்பா" அப்பாவியாகச் சொன்னாள் வள்ளி.


வள்ளியின் முகத்தில் சிறு கசடும் இல்லை. குழந்தைகள் தெய்வம் என்பதில் சிறு பிழையும் இல்லை. வள்ளிக்குத் தூண்டிலைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தான் இவன். தூண்டில் போட கற்றுக் கொண்ட வள்ளிக்குக் கடவுளையே கண்டுவிட்ட மகிழ்ச்சி. குழந்தைகளின் மகிழ்ச்சி மட்டுமே முழுமையானது.


வள்ளியும் , இவனும் ஒரு பாத்திரம் நிறைய ஓடை மீன்களைப் பிடித்திருந்தார்கள். இவனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு மனம் லேசானது. வள்ளி இவனுடன் நன்றாக நட்பாகிப் போனாள். இரவு உணவின் போது ,தன் உணவு தட்டை எடுத்துக் கொண்டு வந்து இவனுடன்  அமர்ந்து சாப்பிட்டாள் வள்ளி. 


இவன் இந்த வீட்டைவிட்டு வெளியேறிப் போகும் வரை வள்ளி இவனுடன் தான் அமர்ந்து சாப்பிட்டாள். 


வள்ளி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அந்தி நேரம் வைக்கோலை அள்ளி மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தான் இவன். 


" ஏ... பெரியப்பா, உன்னைப் பத்தி ஒரு டீச்சர் கேட்டாங்க" என்று மஞ்சள் பையைத் தோளில் போட்டபடி, கள்ளம் இல்லா சிரிப்பொலியோடு வள்ளி வந்து நின்றாள்.


" யாரு தங்கம் ?" தங்கம் என்று செல்லமாக வள்ளியை அழைப்பது இவன் வழக்கம்.


" வாணி டீச்சர். புதுசா ஆறாம் வகுப்புக்கு இங்லீஷ் சொல்லித்தர வர்ராங்க. அவிங்க உங்களோட படிச்சாங்களாம். அவீங்க உங்களோட பேசனும்னு சொன்னாங்க.‌நாளைக்கு அந்தியில் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரச் சொன்னாங்க" சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் பேசினாள் வள்ளி.


பள்ளிக் காலத்தில் வாணியின் மீது இவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பைக் குறித்து ஒரு முறை கூட அவளிடம் இவன் சொன்னது கிடையாது. பள்ளி காலத்திற்குப் பிறகு வாணிக்குத் திருமணம் ஆன செய்தியை மட்டும் கேள்விப் பட்டிருந்தான். மற்றபடி வேறு எந்த தகவலும் இப்போது வரை இவனுக்குத் தெரியாது.


இவன் தெப்பக்குளத்தில் வாணியை சந்தித்தபிறகு இவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம். வாணி அவள் கணவனால் கைவிடப் பட்டுவிட்டாள். காரணம் இவளால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. பள்ளிக் காலத்திலிருந்து அவள் மீது இவனுக்கு ஈர்ப்பு உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் துணையாக்கிக் கொண்டார்கள். தன் தம்பி வீட்டை விட்டு விட்டு வாணியுடன் வாழ ஆரம்பித்தான் இவன். முறையான திருமணம் எதையும் இவர்கள் செய்து கொள்ளவில்லை. மனம் பொருந்தி வாழ்ந்தார்கள். வள்ளிக்கு தன் பெரியப்பாவை அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமும் இருக்கவே செய்தது.


காலம் எவ்வளவு வேகமானது என்பதை வாழ்ந்து முடித்தவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் கண்ணிமைக்கும் நொடிதான் வாழ்க்கையைத் தின்றுவிட்டும் காலம் என்று.


வள்ளி நேற்றுதான் சிறு பிள்ளையாக இருந்தாள் . இன்று அவள் வளர்ந்துவிட்டாள். அவளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நான்கு வருடத்தில் வள்ளி இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானாள். வள்ளியின் தம்பிக்கு ஒரு நாள் திருமணம் நடந்தது. அவனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டான். 


வள்ளி தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தாள். காட்டாறு கூட கொஞ்சம் மெதுவாகப் போகும் போல , ஆனால் காலம் வெகு விரைவாகப் போனது. 


எல்லாம் மாறிப் போன,வாணி ஒருநாள் இறந்து போனாள். இவன் மீண்டும் ஒண்டிக் கட்டையானான். இவனுக்கு என்று பிரித்து விடப்பட்ட நிலத்தில் ஒரு குடிசைப் போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தான். இவன் தம்பியும் ,வள்ளியின் அப்பவும் ஒரு நாள் இறந்து போனான். அன்று வள்ளி அழுத அழுகை சொல்ல முடியாதது. ஒரு நாள் அவள் தாயும் இறந்து போனாள். ஒருநாள் வள்ளியின் கணவனும் இறந்து போனான்.


ஒரு நாள் ஓட்டையில் தூண்டில் போட்டபடி இவன் அமர்ந்திருந்தான். யாரோ பின்னால் நடந்து வந்தார்கள். மெல்லத் திரும்பிப் பார்த்தான். வள்ளி இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நேற்றுதான் அவளைச் சிறுவியாகப் பார்த்த நினைப்பு அவனுக்கு.


" பெரியப்பா, மீன் பிடிக்கிறியா?"


" ஆமா தங்கம்"


" கொடு, நான் பிடிக்கிறேன்" என்று தூண்டிலை வாங்கிக் கொண்டாள். இருவரும் பாத்திரம் நிறைய மீன் பிடித்தார்கள். வள்ளி தான் மீன் குழம்பு வைத்தாள். மிக அட்டகாசமாகச் சமைத்திருந்தாள்.


" தங்கம் எப்ப ஊருக்கு போற?" 


"நாளைக்குப் பெரியப்பா"


" ஏன் போற?"


" என் வீட்டுக்குப் போய் தானே ஆகனும்?"


" உன் அப்பா உயிரோடு இருந்து , அவரு தனியாக இருந்தால் அவரை பார்த்துக் கொண்டு கூட இருக்க மாட்டியா?"


வள்ளி தலையை நிமிர்த்தி இவனைப் பார்த்தாள்.


" எனக்கு வாரிசுனு யாருமில்லை. என் நிலத்தை நீயே எடுத்துக் கொள். என் கூடவே இருந்து விடு" தயங்கிப்படி கேட்டான்.


"நானே கேட்காலாம்னு நினைச்சேன். நீயே சொல்லிடப் பெரியப்பா. எனக்கும் தனியாக இருக்கப் பிடிக்கல. நான் உன்னைப் பார்த்துக் கொண்டு உன்னோடே இருந்துவிடுறேன் பெரியப்பா" என்றாள் வள்ளி. 


அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினான் இவன்.





கோணல் (,சிறுகதை)

 கோணல் (சிறுகதை) "அந்த மரம் ஏன் வளைந்து நெளிந்து வளர்ந்து உள்ளது ?" மாடு மேய்க்கும் பையன் கேட்டான். " அது அதன் இயல்பில் இருக்...